புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

25 ஆகஸ்ட் 2011

`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்

My Example Bouncing ball


டாக்டர் அம்பேத்கர் எழுதிய "BUDDHA AND HIS DHAMMA" ஆங்கில நூலின் தமிழாக்கம் " தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு" ஒன்று அமைக்கப்பட்டு மிகு சிரமத்துடன் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலுக்கு உழைத்தவர்களின் பெயர்கள் தற்போது வெளிவரும் நூட்களில் மறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களையும், அணிந்துரைகளையும் இணைப்பில் காணலாம்.

`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்

My Example Bouncing ball


டாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய " BUDDHA AND HIS DHAMMA" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என பேசக்கேட்டு கவலையுற்றேன். அது புனைக்கதையல்ல . முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதை கீழ்கண்ட ஆதாரக் குறிப்புக்களை படித்து அவர்கள் தெளிவு பெறலாம்.

23 ஆகஸ்ட் 2011

பவுத்தம் வளர்த்த மேனாட்டினர்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

(Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல்அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

ஹெச். ஜி. வெல்ஸ்

(H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ழூல் வேர்ண்). வெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.

கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

(Henry Steel Olcott, ஆகஸ்ட் 2,1832- பெப்ரவரி 17,1907) பல முகங்கள் கொண்ட இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மட்டுமல்லாது இவர் பிரம்மஞான சபையின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களின் ஒருவராவார். மேலும் இவரே இந்த குழுமத்தின் முதல் தலைவரும் ஆவார் . ஐரோப்பிய வேர்களை கொண்ட பிரபலங்களில் முதன் முதலாக முறையாக பௌத்தத்திற்கு மாறிய பெருமை இவரையேசாரும். மேலும் பிரும்மஞான சங்கத்தின் தலைவராக இவர் மிக சிறப்பாக பணியாற்றி பௌத்த மத கூறுகளை புரிந்துகொள்வதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேற்குலக பார்வையில் பௌத்தத்தை முன்னிறுத்திய இவர் ஒரு நவீன பௌத்த அறிஞராக கருதபடுகிறார். இலங்கையில் பௌத்தத்தை மறு சீரமைப்பதில் இவருடய பங்கு முக்கியமானது. இன்றைய இலங்கையின் மத, கலாசார, தேசிய பண்புகளை மறுநிர்மாணம் செய்தவர் என்றும் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவர் என்றும் இன்றும் இலங்கையில் இவரின் பால் பெரும் மரியாதையோடு இருக்கின்றனர். மேலும் சில தீவிர விசுவாசிகள் இவரை போதிசத்துவர்களில் ஒருவர் என்றும் நம்புகிறார்கள்.

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்

(Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, மே 18 - 1872 - பெப்ரவரி 2, 1970), ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். இவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தன் வாழ்க்கையை கழித்தாலும், வேல்சில் பிறந்தார், அங்கேயே இறந்தார்.ரசல் 1900 ஆரம்பங்களில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராக கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வு தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் ஃபிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை ஏரணத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) குறிப்பிடுவது பற்றி "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" என கருதப்படுகிறது. இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம்முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.அவர் போர் எதிர்ப்புச் செயலாளர், காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வாணிபத்தின் ஆதரவாளர். ரசல் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்பு செயல்களால் சிறை தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராக பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித்தவர், அமெரிக்காவின் வியட்நாம் உள்ளீட்டை எதிர்த்தவர். ரசலுக்கு, 1950 இல், இலக்கிய நோபல் பரிசு "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களையும், கருத்து சுதந்திரத்தையும் உணர்ந்தோம்" என்பதற்காக கிடைத்தது".
சர். எட்வின் அர்னால்டு
sir edwin arnold (10 June 1832 – 24 March 1904) செய்தியாளர், ஆசிரியர், மற்றும் கவிஞர். சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப் பெற்ற நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.
வளரும் .......

31 ஜூலை 2011

அன்னை மீனாம்பாள் சிவராஜ்

Document
வேலூர் கோ.வாசுதேவப்பிள்ளை -மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார். தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர். சைமன் குழு வருகையை ஆதரித்து பேசி 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர் ட்ரிப்யூல் உறுப்பினர் , சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர். பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர். பெரியார் . வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர். இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார். டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர். 30 நவம்பர் 1992 ல் பரிநிப்பாணம் அடைந்தார்.

தந்தை என்.சிவராஜ் B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor

Document
வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் -வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தார். 4 ஆம் வகுப்பு வரை தன் வீட்டிலேயே படித்தார். பின் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம் வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக் படிப்பை முடித்து வெஸ்லி கல்லூரியில் 'இண்டர்மீடியேட்' பயின்றார். பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் B.A பட்டம் பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர் இராதாக்கிருஷ்ணன் இவரின் ஆசிரியராக இருந்தது சிறப்புக்குரியது. பின் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்தார். மேலும் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பேராசியராக பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார். 1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம் வயதில் அன்னை மீனாம்பாளை வாழ்க்கை இணையராக்கிக்கொண்டார். தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர். கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதி சந்தர் என 4 மகவுகள் இவர்களுக்கு பிறந்தனர். பவுத்தத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக இருவரும் பின்பற்றினர். சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராக தந்தை திகழ்ந்தார். அப்பொழுது மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரு முதலாளிகளுக்கு சரி நிகராக பந்தயக்குதிரைகளை வைத்து போட்டிகளில் வென்று காட்டியவர். ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர். சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும், சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவராகவும் இருந்தவர். இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர். பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F கலைத்து விட்டு அகில இந்திய குடியரசுக் கட்சியை அமைத்தார். 1956 முதல் அக்கட்சியின் தலைவராக தந்தை சிவராஜ் ஏக மனதாக நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அப்பொறுப்பினை வகித்தார். இந்து மதத்தினை புறக்கணித்து விட்டு , மதம் மாறினால்தான் , நாம் ஒரு தனி இனமாக உரிமைக்குரல் எழுப்பிட முடியும்,போராட முடியும் என வலியுறுத்தினார். நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார். 1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்ப்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார். 1964 செப்டம்பர் 29 ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் பரிநிப்பானம் அடைந்தார்.

09 மே 2011

இந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்



1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும் முதன்மையானவர்கள்.


1916-17 ல்,திலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து "ஹோம் ரூல்" இயக்கத்தினை தோற்றுவிக்கின்றனர். அவ்வியக்கத்தின் போது இக்கொடியினை இந்திய தேசிய கொடியாக உருவாக்கினர்.


1921 ல் மோகன் லால் கரம்சந்த் (காந்தி!!!) முயற்சியால் இக்கொடி உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு வெள்ளை, இசுலாமியருக்கு பச்சை, இந்துக்களுக்கு சிவப்பு, கைராட்டினம் மக்களின் வாழ்வாதாரம் எனவும் கற்பிதம் செய்யப்பட்டது.



1931 ல் இக்கொடி, முழுவதும் இந்துத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.




1931 ஆகஸ்ட் 1 ல் காங்கிரஸ் அங்கீகாரத்தின் பேரில் கொடியமைப்பு இவ்வாறு மாற்றப்பட்டது. இதில் ஆரஞ்சு (தைரியம்), வெண்மை (சமாதானம்), பசுமை (தன்னம்பிக்கை), கைராட்டினம் (மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவது) என கற்பிதம் செய்யப்பட்டது.


இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ராஜேந்திர பிரசாத்அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர்,சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரை குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதிக்கிறது. . கொடியில் பட்டை, நாமம், ராட்டை போன்றவைகளை வைப்பதற்கு மதத்தலைவர்களால் பல்வித கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.அது டாக்டர் பி. ஆர். அம்பேத்கருக்கு உடன்பாடாக இல்லை.அவையினைவிட்டு வெளிநடப்பு செய்கிறார்.


டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டம் எழுதவேண்டியிருப்பதால் சின்னம் பொறிப்பது குறித்து அவரின் முடிவுக்கே விடப்பட்டது. இந்தியாவின் பூர்வீக பவுத்த சமயத்தின் அடையாளமாக அசோகச்சக்கரத்தை பரிந்துரைக்கிறார். அது 1947 ஜூலை 22 ஆம் தேதி பொறிக்கப்படுகிறது.

இது போல புத்தர் முதல் பேருரை நிகழ்த்திய சாரநாத்தில் உள்ள புத்த சமயத்தை சார்ந்த அசோகரின் ஸ்தூபியில் வடிவமைக்கப்பட்டிருந்த நான்முக சிங்க முகங்கள் இந்திய அரசின் சின்னமாகவும், இந்திய நாணயம் மற்றும் பணங்களிலும் பொறிக்கப்படுகிறது.

மேலும், அந்த ஸ்தூபியின் சிங்ககங்களுக்கு அடியில் புத்தர் கூறிய "விரிதாமரை இதழ் போல உன் மனதை திறந்து வை" என்பதற்கேற்ப 16 இதழ்களுடன் வடிவமைக்கப்பட்ட "தாமரை " இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. இச் சின்னங்கள் இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியதால் மதவாதிகள் தேசியக்கொடியையும், பணங்களையும் அழிக்கமுடியாமல், புத்தர் கிருஷ்ணனின் 11 வது அவதாரம் என பிதற்றுகின்றனர். மேலும்,இந்து மதக் கட்சியின் (பிஜேபி) அரசியல் சின்னமாக சிதைந்துள்ளது. இவை மட்டுமின்றி பல்வேறு தளங்களில் பூர்வீக பவுத்த சமய அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இப்பூர்வீக சமயத்தினை பின்பற்றிய பூர்வ குடிகளும் இந்து, முஸ்லீம், கிருத்துவம் என சிதைந்துள்ளனர். வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது என்பார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் .பூர்வ குடிகள் தம் வரலாற்றை அறிய முன் வருவதும், பவுத்த அடையாளங்களை மீட்டெடுப்பதும் இன்று அவசியத் தேவை.

06 மே 2011

வரலாற்றின் தொடக்கம்...

தமிழ்ச் சமூகத்திற்கு பெண்ணியம் என்பது புதிய சிந்தனையல்ல.இலக்கியங்களில் அறம் வளர்த்தவளாக மணிமேகலை, சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அழிப்பவளாக குண்டலகேசி என பல்வேறு தளங்களில் பெண்கள் கோலோச்சிய காலங்கள் காணக்கிடக்கின்றன. ஆனால் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகளால் சமூக வளர்ச்சி, தேச நலம் போன்றவைகளில் ஒற்றுமையாக செயல்பட முடிந்தாலும் பெண் விடுதலை சார்ந்த கருத்துக்களில் நெடுங்காலமாகவே மாறுபட்டே இருந்து வந்துள்ளனர். வரலாற்றில் தாய் உரிமைச் சமுகம் ஆதிச்சமுதாய அமைப்பாக இருந்துள்ளது. வேட்டைச் சமுகத்திற்கு முந்தைய காலங்களில் உணவு தேடுவதே வேலையாக இருந்தது.ஆண்,பெண் பிரிவினை என்பது இல்லாதிருந்தது. குழந்தைப்பேறு, பாலூட்டுவது போன்ற செயல்களால் பெண் முன்னுரிமை பெற்றிருந்தாள். ஈட்டி, வேல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதும் வேட்டையானது ஆணின் தொழிலாக மாறிற்று. மேய்ச்சல் மற்றும் உணவு சேகரிப்பிற்காக விவசாயத்தை பெண்களே கண்டுபிடித்தனர்.உழு கலப்பைகள் கண்டுபிடித்தவுடன் விவசாயம் ஆண்கள் வசமாயிற்று. ஆண்களின் கைகளில் பொருளாதார பலம் குவிக்கப்பட்டது. அப்பலம் பெண்களின் மீது எளிதாக ஆண்களால் பிரயோகிக்கப்பட்டது. அப்பொழுது கால்நடைகளை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கினர். தவிர்க்க முடியாதபடி ஆணாதிக்க சமூகம் நிறுவப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்திற்கும் பெண் அடிமைத் தனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று எங்கல்ஸ் கூறுவது கவனிக்கத்தக்கது. பின்னர் அந்த அடிமைத்தனத்தை மத நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெண்ணானவள் ஆணின் உடைமை. உடைமையினை மறு உற்பத்தி செய்பவள் என்று செயற்கை பொறுப்புக்களில் திணிக்கப்பட்டதால் அவளுடைய பாலியல் அவளுக்குரியதாக இன்றி, ஆணுக்காகவும், அவனால் கையாளக் கூடியதாகவும் ஆக்கப்பட்டது. இயற்கையானது பெண்ணையும், ஆணையும் சமமாகவே நிலைநிறுத்தியுள்ளது. இயற்கை இயங்கு விதியில் இது ஒரு நட்பு முரண். இந்த நட்பு முரண் இல்லையெனில் மனித குலம் அழியும். இம்முரணை வர்க்க பேத, சாதிபேத மற்றும் அனைத்து ஆதிக்கத்திற்கும் அடிப்படைத் தளமாக கட்டமைத்துவிட்டது ஆணாதிக்க உலகம். மதம், சமூகம், தத்துவம், அரசியல், பொருளியல் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமையாகவே இருந்து வருவது வரலாற்றின் வெறுப்பூட்டும் தொடர் உண்மையாகும். இதனால் பெண்கள் சமூக கடமையற்றுவதற்கு வாழ்வியல் சுழல்கள் பெருந்தடையாக உள்ளது. பருவ வயதடையும் வரை ஆண், பெண் இருவருக்கும் எவ்வித மாறுபாடுகளும் இருப்பதில்லை. வழிவழியாக சமூகம் தன் மூளையில் பதிவாகிய படிமங்களைக் கொண்டு, ஆண் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியே பிரித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. இது பள்ளி, கல்லூரிகளிலும் அழுத்தமாக கற்பிக்கப்படுகிறது. இப்பொழுதெல்லாம் பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள் என கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் மறுவடிவமாகவே காண முடிகிறது. இவர்கள் விதிவிலக்குகளை கணக்கிலெடுத்து விதிகளை காண மறுப்பவர்கள். இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கான பல சட்டங்கள், சங்கங்கள், புத்தகங்கள் பல வந்துள்ளன. இருப்பினும் இன்னும் வெறும் உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வை மட்டும் மறைய மறுக்கிறது. பெண்ணை அடிமையாக பார்க்கும் பார்வையானது நாம் பழங்கால மூட நம்பிக்கையினை இன்னும் விடாமல் வளர்த்துக் கொண்டிருப்பதாகவே கருத முடியும். மேலும் பல பெண்கள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பிரித்தறியத் தெரியாமல் இருக்கின்றனர். சலுகைகளை விட்டொழித்தால்தான் உரிமைகளை பெற முடியும் என்பதை உணர்தல் வேண்டும். தற்பொழுது திருமணங்கள் பெரும்பாலும் ஆணுக்கு மகிழ்ச்சியானதாகவும், கூடுதல் இணைப்பாக வேலைக்காரி, சமையல்காரி, தாய், தாசிகளுடன் கிடைப்பதாகவே எண்ணுகிறான். தன் அழைப்பிதழில் கூட வாழ்க்கை இணையர் என்பதற்கு பதிலாக வாழ்க்கை துணை என அச்சிட்டு தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறான். ஆணுக்கு உள்ளது போல் பெரும்பான்மை பெண்களுக்கு திருமணம் மகிழ்ச்சியளிக்காமல் புதிய கடமைகள், புதிய சுழல்கள் போன்றவை குறித்து அச்சமூட்டுபவையாகவே இன்றும் உள்ளது. ஊடகங்கள் அனைத்தும் ஆணாதிக்க சூழலுக்கு ஆதரவு அளிப்பதாகவே உள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்கிறது. இச்சிந்தனை மாற்றத்தினை எழுதுவதலோ, பேசுவதாலோ மாற்றி விடுதல் என்பது இயலாது. ஆண், பெண் சமத்துவத்தின் அடிப்படை அறிவியல் பூர்வமான வேலைப்பிரிவினையோடு கூடியதாக நம் மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கப்படுதல் வேண்டும். மனித இனத்தை செழுமையாகவும், முழுமையானதாகவும் வார்த்தெடுக்கும் நிகழ்வுகள்தான் மனித குல வரலாறு. உண்மையான மனிதகுல வரலாற்றின் தொடக்கம் பெண் விடுதலையிலிருந்துதான் பெற முடியும்.

03 மே 2011

அறிதல்

இயற்கையின் படைப்பில் மானுடம் மிக அழகானது. மற்றெந்த உயிர்களுக்குமில்லா பேசும் தன்மை, சிந்திக்கும் தன்மை, பகுத்தறியும் தன்மை, ரசிப்புத்தன்மை போன்றவை பொருந்தி அமைந்த உயிரினமாக மானுடம் திகழ்கிறது. ரசிப்புத்தன்மை என்பது மானுடத்திற்கு மட்டுமே உரியது. இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ ரசிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. இயற்கையை அழகாக உணர மானுடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது. ரசிப்புத்தன்மைக்கு அடிப்படை காதல். காதலினை இப்படியும் சொல்லலாம். இனவிருத்திக்காக இயற்கை செய்யும் தூண்டுதல் உணர்வின் தொடக்கம் தான் காதல். எனவே காதலின் அடிப்படையாக காமம் இருக்கிறது. எதிரெதிர் வினையினை கவர்வதற்காகவே இயற்கையை நாம் அழகாக பார்க்கக் கற்றுக்கொள்கிறோம். உண்மையான அழகை தேடலில் காணலாம். அழகிற்கான தேடல் உள்ளவரை மனிதன் ரசிகனாக இருக்கிறான்.தேடுவதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உண்டு. தேடுவதற்கு தீர்மானம் இருந்தால் போதும்.ஆனால், பக்குவம் இருந்தால்தான் அறிய முடியும். பிரபஞ்சத்தில் படைப்பாளிகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று இயற்கை. மற்றொன்று படைப்புக்குள்ளேயே படைப்பாளி ஆகிக்கொள்கிற மானுடம்.அம்மானுடம் இயற்கைப் படைப்புக்களை அழகோடு பார்க்கும் பார்வைகளை அழகியல் எனலாம். இயற்கையை அழகோடு பார்க்கும் தொடர் பழக்கத்தினால் இயற்கையிலுள்ள பொருட்கள் ரசனைக்குரியதாக மாறுகிறது. எது விதைக்கப்படுகிறதோ அது சுழலின் தன்மையோடு வளர்த்தெடுக்கப்படும். தற்போது சூழலைப் பொறுத்து ரசனையின் அளவுகோலும் மாறியுள்ளது. ரசனையின் அளவுகோல் மாறியதற்கு மனிதன் இதுவரை தன் மூளையில் உள்வாங்கிக் கொண்டுள்ள பலவிதமான முன் முடிவுகளே அதற்குக் காரணம்இதன்  காரணிகளாக ஊடகம்,கடவுள்,மதம்,சாதி,மோட்சம்,நரகம்,ஊழ்வினை,ஆன்மா,வர்க்கபேதம்ஆண்பெண், பேதம் போன்றவைகளை கூறிக்கொண்டே போகலாம். இயற்கை தன்னை அழகாகவே காட்டிக்கொண்டிருக்கிறதுநாம்தான் பார்க்கத் தவறிக்கொண்டிருக்கிறோம்அழகை ரசிக்க மறந்து விட்டு வாழ்க்கையில் எப்பாடியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம். உண்மையில் வெற்றி என்பது பொய்த்தோற்றம். வெற்றியினை தேடுவதென்பது சமுதாய நிர்பந்தத்தினால் மட்டுமே. அதன் அடிப்படையாக இருப்பது சமூக நிராகரிப்பு குறித்த அச்சமே. எல்லா ஆசைகளும் அச்சத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. தேவை வேறு. ஆசை வேறு.ஆதியில் மானுடம் தேவைக்காக மட்டுமே அழகியலை உள்வாங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஆசைக்காக இயற்கையான அழகியலை மறந்துவிட்டு செயற்கைத் தன்மைக்கு மானுடம் மாறியிருக்கிறது. புதிதாகக் கற்றுக்கொண்டு வாழத்தேவை யில்லைவாழத்தடைகளாகக் கற்றுக்கொண்டவைகளை மனதிலிருந்து அழித்து விட்டால் போதும். தேவைக்கேற்ப மட்டும் ஆசை அமைந்தால் தெளிவும், நிதானமும் தானாகப்பிறக்கும். தெளிவு பிறந்து விட்டால் பார்வை தெரியும். பார்வை தெரிந்தால் பாதை தெரியும். பார்வையானது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள முன் முடிவுகளின் அடிப்படையில் தேவை சார்ந்து மாறுபடுகிறது. முன்முடிவுகளால் இயற்கையிலுள்ள மானுடம் இயற்கையுடன் அந்நியப் பட்டு நிற்கிறது. வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்தையும் முழுதாய் ஆக்கிக்கொள்வதுதான். புவியிலுள்ள பொருட்களை மானுடம் ரசிக்கக் கற்றுக்கொண்டதால்தான் நமக்கு பல்வேறு கலைகள் கிடைத்தது. ஆக்கப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் அழகியல் தன்மையோடுதான் நிகழ்ந்தேறியுள்ளது .அழகியலற்ற தன்மை மானிடத்தை அற்ப நிலைக்கு தள்ளிவிடும். முன்முடிவுகளால் ஏற்படுத்திக்கொண்ட எதிர் மறைகளை விலக்கி, நேர்மறைகளை நோக்கி பார்வையினை செலுத்தினால் இப்புவி அழகாகும். அழகியலை மானுடத்திற்கு விளக்க வேண்டிய கலை வல்லுனர்களே முன்முடிவுகளால் குறுகி விற்ப்பன்னர்களாக மாறியுள்ளது வருந்தத் தக்கது.கலைகளை தவிர்த்து விட்டு வரலாறு என்பது கிடையாது. உண்மையான வரலாறு என்பதை கலை,இலக்கியங்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.கலை,இலக்கியம் உருவாக அழகியல் தன்மை முதன்மையாக உள்ளது. ஆக,அழகியல் பார்வையை விரிவுபடுத்துவோம். அழகியலோடு வாழ்வோம்அழகியலோடு உண்மை வரலாற்றை மானுடத்திற்கு அளிப்போம்.

புத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர்

My Example Bouncing ball

02 மே 2011

பவுத்த சான்றிதழ்

சிதம்பரம் வட்டடாட்சியர் வழங்கிய பவுத்த சான்றிதழ்
டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா வழங்கிய பவுத்த சான்றிதழ்
தமிழக அரசிதழில் பவுத்தம் மாறுவதற்கான அறிவிப்பு விளம்பரம்
பவுத்தம் மாறிய SC/ST வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீடு உண்டு என்பதற்கான பிரசிடென்சியல் ஆனண
தினமணி செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தினத்தந்தி செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தினமலர் செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
புதிய நீதிச்சக்கரம் மாத இதழ் வெளியிட்ட செய்தி
கொற்றவை மாத இதழ் வெளியிட்ட செய்தி
தலித் முரசு மாத இதழ் வெளியிட்ட செய்தி
தி இந்து ஆங்கிலச் செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகள்
பவுத்தம் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகள்

உயர்நீதி மன்ற தீர்ப்பாணை W.P.NO.5874 OF 2010

இத் தீர்ப்பு நகலை வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் பவுத்த சான்று தயக்கமின்றி பெற முடியும்.

29 ஜனவரி 2011

அயோத்திதாசர்

தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார். லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது. தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார். பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஆரிய, திராவிட போர் தமிழகத்தில் வீரியமாய் நடந்த காலத்தில் அதற்கு அடித்தளமாய் பல ஆண்டுகளுக்கு முன்னால் வேத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்று வருண சனியை வலு கொண்டு தன் கருத்து ஆயுதத்தால் அடித்து நொறுக்கியவர்.

வாழ்க்கைச் சுருக்கம்
பண்டிதர் அயோத்திதாசர் 20.05.1845 இல் தமிழகத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் குறித்து ஆய்வாளர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். ராயபுரத்தில் பிறந்தார் என்றும், தேனாம்பேட்டை மங்கித்தோட்டத்தில் பிறந்தார் எனவும், மேலும் கோவை அரசம்பாளையம் எனவும் எழுதி வருகின்றார்கள். இவருடைய தந்தை பெயர் கந்தசாமி, தாயார் பெயர் தெரியவில்லை. இவரின் பாட்டனார் பெயர் பட்லர் கந்தப்பன் ஆகும். ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணிபுரிந்த இவர், பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் உள்ள திருக்குறளை எல்லிசு துரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களே தேச வரலாறையும் இலக்கிய வரலாறையும் பாதுகாத்தார்கள் என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டாகும். அயோத்திதாசருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். பிறகு தன் பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். தோடர் குலப்பெண்ணை அக்காலத்திலேயே சீர்திருத்தத் திருமணம் செய்து புரட்சி செய்தார். இருவருக்கும் தசரதராமன் என்கிற மகன் இருந்தார் எனவும் தெரிகிறது. இவரது மனைவியார் மரணமடைந்தபிறகு பண்டிதர் உறவினர்களின் வற்புறுத்தலினால் சமூகப்போராளி இரட்டைமலை சீனிவாசன் தாத்தா அவர்களின் சகோதரி தனலட்சுமி அம்மையாரை மணம் முடித்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினார். தசரத ராமனோடு இவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.

பண்டிதரின் அறிவுத் தேடல்
ஒவ்வொருவரும் இந்து சதுர்வர்ண சதியை புரிந்து கொள்ளும்போது அதன் கொடூரம் வெளிப்படும். அந்த வகையில் அயோத்தி தாசர் தன் சமூகம் சாதிய வன்கொடுமையை அனுபவிப்பதற்கு காரணங்களை ஆராய்ந்து தெளிந்த போது இந்து சமயத்தையே உதறித் தள்ளுகின்றார். பண்டிதர் இளமையிலேயே கற்கும் ஆர்வத்தினை கொண்டு, குருகுலத்தில் சேர்ந்து கல்வி கற்றார். மானுடத்தில் ஒடுக்கப்பட்ட என்று சொல்லப்படுகின்ற பூர்வகுடி தலித் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மடையன் மனுவின் அதர்மத்தை தான் அனைத்தையும் கற்று பயின்றதின் மூலம் உடைத்தெரிகிறார் அயோத்தி தாசர். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைவினை பூர்வ குடிமக்கள் தருவோம் என்று அயோத்தி தாசர் படித்து கல்வி மாமேதை அம்பேத்கருக்கு முன்னால் எதிர்வினையாற்றினார். தமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாம், கிருத்துவ இந்து சமய தத்துவங்களை ஆழ கற்று உணர்ந்தார். அனைத்து துறைகளிலும் கற்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிவுடைய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அரசர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்த ஆரியவர்க்கத்தின் ஆணிவேரை வெட்டி எரிய முடியும் என்றும் அறிந்தார் போலும்.

பண்டிதரின் பன்முகம்
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அயோத்தி தாசரின் காலம் என குறிக்கலாம். தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, திராவிட எழுச்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல. தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆழமாக கற்றுணர்ந்து தமிழ் அறிஞராக இருந்தார். இவர் கற்ற பழந்தமிழ் நூல்கள் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கல்வியும் புலமையும் ஆதிக்க வல்லுறுக்களின் வன்கருத்தியலை சிதைத்தது. அனைத்து துறைகளிலும் கற்று வல்லவராக இருந்தார் என்பது மட்டுமல்ல களப்பணியாற்றி பூர்வகுடிமக்களின் உரிமையும் பெற்றுத் தந்தார். 1870களில் தமிழகத்தில் பதிவுச் செய்யப்படாத பல ஆதித்திராவிட சங்கங்கள் இயங்கி வந்தன. 1870-ல் அத்வைதானந்த சபையை நீலகிரில் நிறுவினார். 1882 தியோசபிகல் சொசைட்டி அடையாற்றில் இயங்கி வந்தது. இந்த சொசைட்டியில் ஹென்றி ஆல்காட், அயோத்தி தாசர், பேரா பி.லட்சுமிநரசு என வேத எதிர்ப்பு போராளிகள் ஒன்றிணைய தியோசபிகல் சொசைட்டி வழிவகுத்தது. 1890 இல் திராவிட சங்கத்தை நிறுவினார். திராவிடர்களை அமைப்பாக்குகின்ற பணியை அயோத்திதாசர் இச்சங்கத்தின் மூலம் செய்தார். 1891 இல் திசம்பர் 1 ஆம் தேதி திராவிட சங்கத்தின் முதல் மாநாடு நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பகிர்வு, சமூக இழிவு நீங்க போராடுவது என அத்தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த மாநாடே ஆதிக்க வர்கத்தின் அடிதளத்தை அசைத்தது. 1892 அன்றைய ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு அயோத்தி தாசர் இரண்டு கொள்கைகளை முன்வைத்தார். (i) பூர்வகுடி மக்களுக்கு 4 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும். (ii) பூர்வகுடி மக்களுக்கு புறம்போக்கு நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையே பின்னாளில் தலித்துக்களுக்கு பஞ்சமி நிலம் ஆங்கில அரசு வழங்க தோன்றலாய் அமைந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஆல்காட் (Colonal Hendry Olcott) அவர்களின் நட்புறவு அயோத்தி தாசர் களப்பணிகளுக்கும், அவர் மேற்கொண்ட உரிமைப் போர்களுக்கும் மேலும் வலு சேர்த்தது. 1894-ல் ஆல்காட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியோடு சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவி சாதி இந்துக்களின் கல்வி கற்கும் பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது கல்வி அருமை தெரிந்த அயோத்தி தாசர் தலித்துக்களின் கல்வி உரிமையை மீட்டெடுத்தார்.

பௌத்த மாற்றம்
இந்துமத தத்துவங்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதை நன்குணர்ந்தார் அயோத்தி தாசர். தன் சமூக மக்கள் சமூக இழிவுகளுக்கு இந்து மதம் உட்படுத்துவதாலும் சதுர்வர்ண சாதி கட்டமைப்பை கட்டுடைக்கவும், சமூகத் தலித்தில் தலித் மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் அக, புற, சுதந்திர உணர்வோட தம் மக்களின் வாழ்க்கையை நிலை நிறுத்த அயோத்தி தாசர் பௌத்தத்தை முன்மொழிந்தார். பௌத்த ஆர்வலர்களை நாடியே அவரின் சிந்தனை நகர்ந்தது. 1898 ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்மபாலாவையும் சந்தித்து, தானும் தம் மக்களும் பௌத்த மதத்தை தழுவ இருப்பதாகத் தெரிவித்தார். அதனடிப்படையில் அயோத்தி தாசர், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி.கிருஷ்ணசாமி முதலியோர் 1898-இல் கொழும்புக்கு சென்று பௌத்த சமயத்தைத் தழுவி தலித் மக்களின் விடுதலைக்கும், தலித் மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை நிலை நிறுத்தினார். சென்னை ராயப்பேட்டையில் 1898-இல் இதன் இந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார். விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப்படுத்தியது. அந்தப் பண்பாட்டின் மீட்டெடுப்பை 1898-இல் அயோத்தி தாசர் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார். தமிழகத்தில் திராவிட உணர்வையும் பகுத்தறிவு உணர்வையும் ஆழமாக உள்வாங்கி கொண்டு, பிராமணீய எதிர்ப்புக்கிடையில் பத்திரிக்கை நடத்தி காட்டினார்.

தமிழ்த் தேசியத் தந்தை
''தமிழ்த் தேசியத் தந்தை'' என்று அயோத்தி தாசர் அவர்களை முன்னிறுத்தலாம். 1907 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தி வார ஏட்டை தொடங்கினார். ராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 முதல் வெளிவந்து தமிழகத்தின் மூட வழக்காறுகளை, புராணங்களை, இந்துமத வெற்று கருத்துக்களை எதிர்த்து பிராமணியத்தின் வேரறுக்க தமிழன் வெளிவந்தது. திராவிடன் ''தமிழன்'' என்கிற உணர்வை திராவிடர்களுக்கு உணர்த்தவும், தமிழனின் பண்பாட்டை காக்கவும், தமிழகத்தில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தத்துவார்த்த, பகுத்தறிவு வழிக்காட்டவும் அயோத்தி தாசர் வெற்றிகரமாக தமிழன் இதழை 19.06.1907 முதல் 1914 வரை நடத்தினார். பிறகு தமிழன் இதழை அடுத்த தலைமுறையினர் நடத்தினர்.

அயோத்திதாசர் இதழின் வாயிலாக பூர்வ குடிமக்களே தமிழகத்தில் பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும், இன உணர்வையும், உணர்த்தினார்கள் என்ற வரலாறையும் மற்றும் சாதியத்தின் வேர் அறுக்க அஞ்சாத சிங்கங்களாக இருந்தார்கள் என்ற வரலாற்றை தமிழகத்து அறிவுலகம் மறைத்தது என்பது (அயோத்தி தாசர்) வரலாற்று இரட்டிப்பாகும்.

அயோத்திதாசரின் சில படைப்புகள்
அயோத்தி தாசர் 1912-இல் புத்தரின் வரலாற்றை ''புத்தரது ஆதிவேதம்'' என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார். தன் தலித் இனத்தின் வரலாற்றை தாங்கியும், இந்த இனத்தில் இழிவுகளை ஆய்ந்து தன் இழிவுகளை துடைக்க முற்படாத எவரும் வரலாற்றில் இடம்பெற மாட்டார்கள். தன் இனத்தின் மீது ஏவப்பட்ட சமூக கொடுமைகளை கண்டு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கு இடையில் தன் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்து தன் சமூக விடுதலைக்கு பௌத்தத்தை முன்வைத்து, தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றிய அயோத்திதாசர் அவர்கள் 05.05.1914-இல் பரிநிர்வாணம் அடைந்தார். அவரின் கொள்கையைப் பரப்பவேண்டும். அவரது வரலாற்றை வன்கொடுமை செய்தவர்களின் அடுத்த தலைமுறை அவரது கொள்கைகளைப் படிக்க வேண்டும். தலித் பூர்வகுடிமக்களின் முழு வரலாறாகவும் தமிழகத்தில் அயோத்தி தாசர் விளங்குகிறார். திராவிட பண்பாட்டின் தாயாகவும், தமிழ்த் தேசியத்தின் தந்தையாகவும், அயோத்தி தாசர் விளங்குகிறார் என்பதை தமிழகம், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தலித் அறிஞர்களும், ஆய்வாளர்களும் அயோத்திதாசரின் கருத்தை மக்கள் மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதும், அவரின் சிந்தனைகள் எளிய பிரதிகளாக அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்துவதும் உடனடித் தேவையாகும். ஒரு நூற்றாண்டுகளாக தாசரின் வரலாற்று, அவரின் நூற்றாண்டு இறுதியில் தான் பரப்புரையானது என்பது இந்த சமூகத்திற்கு மேலும் செய்த சிந்தனை வன்கொடுமையாகும். இனி மறைந்த வரலாறுகளை மீட்டெடுப்போம் அயோத்தி தாசரின் பௌத்த நெறியில் அணிவகுப்போம்.