புத்தர்
Buddha
அம்பேத்கர்
Ambedkar
நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்
I never see what has been done; I only see what remains to be done
நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை
Cultivation of mind should be the ultimate aim of human existence
20 மே 2011
09 மே 2011
இந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்
1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும் முதன்மையானவர்கள்.
1916-17 ல்,திலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து "ஹோம் ரூல்" இயக்கத்தினை தோற்றுவிக்கின்றனர். அவ்வியக்கத்தின் போது இக்கொடியினை இந்திய தேசிய கொடியாக உருவாக்கினர்.
1921 ல் மோகன் லால் கரம்சந்த் (காந்தி!!!) முயற்சியால் இக்கொடி உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு வெள்ளை, இசுலாமியருக்கு பச்சை, இந்துக்களுக்கு சிவப்பு, கைராட்டினம் மக்களின் வாழ்வாதாரம் எனவும் கற்பிதம் செய்யப்பட்டது.
1931 ல் இக்கொடி, முழுவதும் இந்துத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.
1931 ஆகஸ்ட் 1 ல் காங்கிரஸ் அங்கீகாரத்தின் பேரில் கொடியமைப்பு இவ்வாறு மாற்றப்பட்டது. இதில் ஆரஞ்சு (தைரியம்), வெண்மை (சமாதானம்), பசுமை (தன்னம்பிக்கை), கைராட்டினம் (மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவது) என கற்பிதம் செய்யப்பட்டது.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ராஜேந்திர பிரசாத்அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர்,சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரை குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதிக்கிறது. . கொடியில் பட்டை, நாமம், ராட்டை போன்றவைகளை வைப்பதற்கு மதத்தலைவர்களால் பல்வித கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.அது டாக்டர் பி. ஆர். அம்பேத்கருக்கு உடன்பாடாக இல்லை.அவையினைவிட்டு வெளிநடப்பு செய்கிறார்.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டம் எழுதவேண்டியிருப்பதால் சின்னம் பொறிப்பது குறித்து அவரின் முடிவுக்கே விடப்பட்டது. இந்தியாவின் பூர்வீக பவுத்த சமயத்தின் அடையாளமாக அசோகச்சக்கரத்தை பரிந்துரைக்கிறார். அது 1947 ஜூலை 22 ஆம் தேதி பொறிக்கப்படுகிறது.
இது போல புத்தர் முதல் பேருரை நிகழ்த்திய சாரநாத்தில் உள்ள புத்த சமயத்தை சார்ந்த அசோகரின் ஸ்தூபியில் வடிவமைக்கப்பட்டிருந்த நான்முக சிங்க முகங்கள் இந்திய அரசின் சின்னமாகவும், இந்திய நாணயம் மற்றும் பணங்களிலும் பொறிக்கப்படுகிறது.
மேலும், அந்த ஸ்தூபியின் சிங்ககங்களுக்கு அடியில் புத்தர் கூறிய "விரிதாமரை இதழ் போல உன் மனதை திறந்து வை" என்பதற்கேற்ப 16 இதழ்களுடன் வடிவமைக்கப்பட்ட "தாமரை " இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. இச் சின்னங்கள் இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியதால் மதவாதிகள் தேசியக்கொடியையும், பணங்களையும் அழிக்கமுடியாமல், புத்தர் கிருஷ்ணனின் 11 வது அவதாரம் என பிதற்றுகின்றனர். மேலும்,இந்து மதக் கட்சியின் (பிஜேபி) அரசியல் சின்னமாக சிதைந்துள்ளது. இவை மட்டுமின்றி பல்வேறு தளங்களில் பூர்வீக பவுத்த சமய அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இப்பூர்வீக சமயத்தினை பின்பற்றிய பூர்வ குடிகளும் இந்து, முஸ்லீம், கிருத்துவம் என சிதைந்துள்ளனர். வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது என்பார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் .பூர்வ குடிகள் தம் வரலாற்றை அறிய முன் வருவதும், பவுத்த அடையாளங்களை மீட்டெடுப்பதும் இன்று அவசியத் தேவை.
08 மே 2011
06 மே 2011
வரலாற்றின் தொடக்கம்...

தமிழ்ச் சமூகத்திற்கு பெண்ணியம் என்பது புதிய சிந்தனையல்ல.இலக்கியங்களில் அறம் வளர்த்தவளாக மணிமேகலை, சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அழிப்பவளாக குண்டலகேசி என பல்வேறு தளங்களில் பெண்கள் கோலோச்சிய காலங்கள் காணக்கிடக்கின்றன. ஆனால் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகளால் சமூக வளர்ச்சி, தேச நலம் போன்றவைகளில் ஒற்றுமையாக செயல்பட முடிந்தாலும் பெண் விடுதலை சார்ந்த கருத்துக்களில் நெடுங்காலமாகவே மாறுபட்டே இருந்து வந்துள்ளனர்.
வரலாற்றில் தாய் உரிமைச் சமுகம் ஆதிச்சமுதாய அமைப்பாக இருந்துள்ளது. வேட்டைச் சமுகத்திற்கு முந்தைய காலங்களில் உணவு தேடுவதே வேலையாக இருந்தது.ஆண்,பெண் பிரிவினை என்பது இல்லாதிருந்தது. குழந்தைப்பேறு, பாலூட்டுவது போன்ற செயல்களால் பெண் முன்னுரிமை பெற்றிருந்தாள். ஈட்டி, வேல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதும் வேட்டையானது ஆணின் தொழிலாக மாறிற்று. மேய்ச்சல் மற்றும் உணவு சேகரிப்பிற்காக விவசாயத்தை பெண்களே கண்டுபிடித்தனர்.உழு கலப்பைகள் கண்டுபிடித்தவுடன் விவசாயம் ஆண்கள் வசமாயிற்று. ஆண்களின் கைகளில் பொருளாதார பலம் குவிக்கப்பட்டது. அப்பலம் பெண்களின் மீது எளிதாக ஆண்களால் பிரயோகிக்கப்பட்டது. அப்பொழுது கால்நடைகளை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கினர். தவிர்க்க முடியாதபடி ஆணாதிக்க சமூகம் நிறுவப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்திற்கும் பெண் அடிமைத் தனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று எங்கல்ஸ் கூறுவது கவனிக்கத்தக்கது.
பின்னர் அந்த அடிமைத்தனத்தை மத நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெண்ணானவள் ஆணின் உடைமை. உடைமையினை மறு உற்பத்தி செய்பவள் என்று செயற்கை பொறுப்புக்களில் திணிக்கப்பட்டதால் அவளுடைய பாலியல் அவளுக்குரியதாக இன்றி, ஆணுக்காகவும், அவனால் கையாளக் கூடியதாகவும் ஆக்கப்பட்டது.
இயற்கையானது பெண்ணையும், ஆணையும் சமமாகவே நிலைநிறுத்தியுள்ளது. இயற்கை இயங்கு விதியில் இது ஒரு நட்பு முரண். இந்த நட்பு முரண் இல்லையெனில் மனித குலம் அழியும். இம்முரணை வர்க்க பேத, சாதிபேத மற்றும் அனைத்து ஆதிக்கத்திற்கும் அடிப்படைத் தளமாக கட்டமைத்துவிட்டது ஆணாதிக்க உலகம்.
மதம், சமூகம், தத்துவம், அரசியல், பொருளியல் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமையாகவே இருந்து வருவது வரலாற்றின் வெறுப்பூட்டும் தொடர் உண்மையாகும். இதனால் பெண்கள் சமூக கடமையற்றுவதற்கு வாழ்வியல் சுழல்கள் பெருந்தடையாக உள்ளது.
பருவ வயதடையும் வரை ஆண், பெண் இருவருக்கும் எவ்வித மாறுபாடுகளும் இருப்பதில்லை. வழிவழியாக சமூகம் தன் மூளையில் பதிவாகிய படிமங்களைக் கொண்டு, ஆண் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியே பிரித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. இது பள்ளி, கல்லூரிகளிலும் அழுத்தமாக கற்பிக்கப்படுகிறது.
இப்பொழுதெல்லாம் பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள் என கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் மறுவடிவமாகவே காண முடிகிறது. இவர்கள் விதிவிலக்குகளை கணக்கிலெடுத்து விதிகளை காண மறுப்பவர்கள்.
இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கான பல சட்டங்கள், சங்கங்கள், புத்தகங்கள் பல வந்துள்ளன. இருப்பினும் இன்னும் வெறும் உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வை மட்டும் மறைய மறுக்கிறது. பெண்ணை அடிமையாக பார்க்கும் பார்வையானது நாம் பழங்கால மூட நம்பிக்கையினை இன்னும் விடாமல் வளர்த்துக் கொண்டிருப்பதாகவே கருத முடியும்.
மேலும் பல பெண்கள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பிரித்தறியத் தெரியாமல் இருக்கின்றனர். சலுகைகளை விட்டொழித்தால்தான் உரிமைகளை பெற முடியும் என்பதை உணர்தல் வேண்டும்.
தற்பொழுது திருமணங்கள் பெரும்பாலும் ஆணுக்கு மகிழ்ச்சியானதாகவும், கூடுதல் இணைப்பாக வேலைக்காரி, சமையல்காரி, தாய், தாசிகளுடன் கிடைப்பதாகவே எண்ணுகிறான். தன் அழைப்பிதழில் கூட வாழ்க்கை இணையர் என்பதற்கு பதிலாக வாழ்க்கை துணை என அச்சிட்டு தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறான்.
ஆணுக்கு உள்ளது போல் பெரும்பான்மை பெண்களுக்கு திருமணம் மகிழ்ச்சியளிக்காமல் புதிய கடமைகள், புதிய சுழல்கள் போன்றவை குறித்து அச்சமூட்டுபவையாகவே இன்றும் உள்ளது.
ஊடகங்கள் அனைத்தும் ஆணாதிக்க சூழலுக்கு ஆதரவு அளிப்பதாகவே உள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்கிறது.
இச்சிந்தனை மாற்றத்தினை எழுதுவதலோ, பேசுவதாலோ மாற்றி விடுதல் என்பது இயலாது. ஆண், பெண் சமத்துவத்தின் அடிப்படை அறிவியல் பூர்வமான வேலைப்பிரிவினையோடு கூடியதாக நம் மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கப்படுதல் வேண்டும்.
மனித இனத்தை செழுமையாகவும், முழுமையானதாகவும் வார்த்தெடுக்கும் நிகழ்வுகள்தான் மனித குல வரலாறு. உண்மையான மனிதகுல வரலாற்றின் தொடக்கம் பெண் விடுதலையிலிருந்துதான் பெற முடியும்.
03 மே 2011
அறிதல்

இயற்கையின் படைப்பில் மானுடம் மிக அழகானது. மற்றெந்த உயிர்களுக்குமில்லா பேசும் தன்மை, சிந்திக்கும் தன்மை, பகுத்தறியும் தன்மை, ரசிப்புத்தன்மை போன்றவை பொருந்தி அமைந்த உயிரினமாக மானுடம் திகழ்கிறது. ரசிப்புத்தன்மை என்பது மானுடத்திற்கு மட்டுமே உரியது. இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ ரசிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. இயற்கையை அழகாக உணர மானுடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.
ரசிப்புத்தன்மைக்கு அடிப்படை காதல். காதலினை இப்படியும் சொல்லலாம். இனவிருத்திக்காக இயற்கை செய்யும் தூண்டுதல் உணர்வின் தொடக்கம் தான் காதல். எனவே காதலின் அடிப்படையாக காமம் இருக்கிறது. எதிரெதிர் வினையினை கவர்வதற்காகவே இயற்கையை நாம் அழகாக பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்.
உண்மையான அழகை தேடலில் காணலாம். அழகிற்கான தேடல் உள்ளவரை மனிதன் ரசிகனாக இருக்கிறான்.தேடுவதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உண்டு. தேடுவதற்கு தீர்மானம் இருந்தால் போதும்.ஆனால், பக்குவம் இருந்தால்தான் அறிய முடியும்.
பிரபஞ்சத்தில் படைப்பாளிகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று இயற்கை. மற்றொன்று படைப்புக்குள்ளேயே படைப்பாளி ஆகிக்கொள்கிற மானுடம்.அம்மானுடம் இயற்கைப் படைப்புக்களை அழகோடு பார்க்கும் பார்வைகளை அழகியல் எனலாம்.
இயற்கையை அழகோடு பார்க்கும் தொடர் பழக்கத்தினால் இயற்கையிலுள்ள பொருட்கள் ரசனைக்குரியதாக மாறுகிறது.
எது விதைக்கப்படுகிறதோ அது சுழலின் தன்மையோடு வளர்த்தெடுக்கப்படும். தற்போது சூழலைப் பொறுத்து ரசனையின் அளவுகோலும் மாறியுள்ளது. ரசனையின் அளவுகோல் மாறியதற்கு மனிதன் இதுவரை தன் மூளையில் உள்வாங்கிக் கொண்டுள்ள பலவிதமான முன் முடிவுகளே அதற்குக் காரணம். இதன் காரணிகளாக ஊடகம்,கடவுள்,மதம்,சாதி,மோட்சம்,நரகம்,ஊழ்வினை,ஆன்மா,வர்க்கபேதம், ஆண், பெண்,
பேதம் போன்றவைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இயற்கை தன்னை அழகாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நாம்தான் பார்க்கத் தவறிக்கொண்டிருக்கிறோம். அழகை ரசிக்க மறந்து விட்டு வாழ்க்கையில் எப்பாடியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம்.
உண்மையில் வெற்றி என்பது பொய்த்தோற்றம். வெற்றியினை தேடுவதென்பது சமுதாய நிர்பந்தத்தினால் மட்டுமே. அதன் அடிப்படையாக இருப்பது சமூக நிராகரிப்பு குறித்த அச்சமே. எல்லா ஆசைகளும் அச்சத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.
தேவை வேறு. ஆசை வேறு.ஆதியில் மானுடம் தேவைக்காக மட்டுமே அழகியலை உள்வாங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஆசைக்காக இயற்கையான அழகியலை மறந்துவிட்டு செயற்கைத் தன்மைக்கு மானுடம் மாறியிருக்கிறது.
புதிதாகக் கற்றுக்கொண்டு வாழத்தேவை யில்லை. வாழத்தடைகளாகக் கற்றுக்கொண்டவைகளை மனதிலிருந்து அழித்து விட்டால் போதும்.
தேவைக்கேற்ப மட்டும் ஆசை அமைந்தால் தெளிவும், நிதானமும் தானாகப்பிறக்கும். தெளிவு பிறந்து விட்டால் பார்வை தெரியும். பார்வை தெரிந்தால் பாதை தெரியும்.
பார்வையானது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள முன் முடிவுகளின் அடிப்படையில் தேவை சார்ந்து மாறுபடுகிறது. முன்முடிவுகளால் இயற்கையிலுள்ள மானுடம் இயற்கையுடன் அந்நியப் பட்டு நிற்கிறது.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்தையும் முழுதாய் ஆக்கிக்கொள்வதுதான்.
புவியிலுள்ள பொருட்களை மானுடம் ரசிக்கக் கற்றுக்கொண்டதால்தான் நமக்கு பல்வேறு கலைகள் கிடைத்தது. ஆக்கப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் அழகியல் தன்மையோடுதான் நிகழ்ந்தேறியுள்ளது .அழகியலற்ற தன்மை மானிடத்தை அற்ப நிலைக்கு தள்ளிவிடும்.
முன்முடிவுகளால் ஏற்படுத்திக்கொண்ட எதிர் மறைகளை விலக்கி, நேர்மறைகளை நோக்கி பார்வையினை செலுத்தினால் இப்புவி அழகாகும்.
அழகியலை மானுடத்திற்கு விளக்க வேண்டிய கலை வல்லுனர்களே முன்முடிவுகளால் குறுகி விற்ப்பன்னர்களாக மாறியுள்ளது வருந்தத் தக்கது.கலைகளை தவிர்த்து விட்டு வரலாறு என்பது கிடையாது. உண்மையான வரலாறு என்பதை கலை,இலக்கியங்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.கலை,இலக்கியம் உருவாக அழகியல் தன்மை முதன்மையாக உள்ளது.
ஆக,அழகியல் பார்வையை விரிவுபடுத்துவோம்.
அழகியலோடு வாழ்வோம். அழகியலோடு உண்மை வரலாற்றை மானுடத்திற்கு அளிப்போம்.
02 மே 2011
பவுத்த சான்றிதழ்
சிதம்பரம் வட்டடாட்சியர் வழங்கிய பவுத்த சான்றிதழ்
டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா வழங்கிய பவுத்த சான்றிதழ்
தமிழக அரசிதழில் பவுத்தம் மாறுவதற்கான அறிவிப்பு விளம்பரம்
பவுத்தம் மாறிய SC/ST வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீடு உண்டு என்பதற்கான பிரசிடென்சியல் ஆனண
தினமணி செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தினத்தந்தி செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தினமலர் செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
புதிய நீதிச்சக்கரம் மாத இதழ் வெளியிட்ட செய்தி
கொற்றவை மாத இதழ் வெளியிட்ட செய்தி
தலித் முரசு மாத இதழ் வெளியிட்ட செய்தி
தி இந்து ஆங்கிலச் செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகள்
பவுத்தம் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகள்
உயர்நீதி மன்ற தீர்ப்பாணை W.P.NO.5874 OF 2010
இத் தீர்ப்பு நகலை வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் பவுத்த சான்று தயக்கமின்றி பெற முடியும்.
29 ஜனவரி 2011
அயோத்திதாசர்
தமிழக வரலாற்றில், ஆரிய எதிர்ப்பின் ஆதி விதையை விதைத்து சமூக விடுதலையை வென்று எடுப்பதற்காக 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறப்பெடுத்தார் அறிவு ஆசான் பண்டிதர் அயோத்திதாசர். வர்ணத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை தமிழகத்தில் மீட்டெடுக்க தத்துவ பிரம்பெடுத்தவர் பண்டிதர் ஆவார்.
லூதரால் தொடங்கப்பட்ட மதச் சீர்த்திருத்தம், ஐரோப்பிய மக்களின் விடுதலைக்கு துணை இருந்தது. முகமது நபியின் மதப்புரட்சி அரேபியர்களின் அரசியல் எழுக்ச்சிக்கு வழிவகுத்தது. இந்தியாவில் சந்திரகுப்த மௌரியரால் நடத்தப்பட்ட அரசியல் புரட்சிக்குப் புத்தரின் மதப்புரட்சியும் சமுதாயப் புரட்சியும் முன்னோடியாக இருந்தது என்று புரட்சியாளர் அம்பேத்கர் கூறுவார். அதைப்போலவே அம்பேத்கரின் பௌத்தமதப் புரட்சி தலித் மக்களின் விடுதலைக்கு வழி வகுத்தது என்றால் அதற்கு அயோத்தி தாசரின் பௌத்தமே முன்னோடியாக இருந்தது.
தமிழகத்தில் தலித் மக்களின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், மதமறுமலர்ச்சிக்கும் தோற்றுவாயாக இருந்தவர், தமிழ் மண்ணில் தத்துவத்தையும், தன்மானத்தையும் அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஆரிய, திராவிட போர் தமிழகத்தில் வீரியமாய் நடந்த காலத்தில் அதற்கு அடித்தளமாய் பல ஆண்டுகளுக்கு முன்னால் வேத எதிர்ப்பு, சாதி மறுப்பு என்று வருண சனியை வலு கொண்டு தன் கருத்து ஆயுதத்தால் அடித்து நொறுக்கியவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
பண்டிதர் அயோத்திதாசர் 20.05.1845 இல் தமிழகத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் குறித்து ஆய்வாளர் பல்வேறு கருத்துக்களை கூறுகின்றார்கள். ராயபுரத்தில் பிறந்தார் என்றும், தேனாம்பேட்டை மங்கித்தோட்டத்தில் பிறந்தார் எனவும், மேலும் கோவை அரசம்பாளையம் எனவும் எழுதி வருகின்றார்கள்.
இவருடைய தந்தை பெயர் கந்தசாமி, தாயார் பெயர் தெரியவில்லை. இவரின் பாட்டனார் பெயர் பட்லர் கந்தப்பன் ஆகும். ஆங்கிலேயரிடம் பட்லராகப் பணிபுரிந்த இவர், பாதுகாத்து வைத்திருந்த ஓலைச்சுவடியில் உள்ள திருக்குறளை எல்லிசு துரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் ஒடுக்கப்பட்டவர்களே தேச வரலாறையும் இலக்கிய வரலாறையும் பாதுகாத்தார்கள் என்பதற்கு இது மாபெரும் எடுத்துக்காட்டாகும்.
அயோத்திதாசருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். பிறகு தன் பெயரை அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். தோடர் குலப்பெண்ணை அக்காலத்திலேயே சீர்திருத்தத் திருமணம் செய்து புரட்சி செய்தார். இருவருக்கும் தசரதராமன் என்கிற மகன் இருந்தார் எனவும் தெரிகிறது. இவரது மனைவியார் மரணமடைந்தபிறகு பண்டிதர் உறவினர்களின் வற்புறுத்தலினால் சமூகப்போராளி இரட்டைமலை சீனிவாசன் தாத்தா அவர்களின் சகோதரி தனலட்சுமி அம்மையாரை மணம் முடித்துக் கொண்டு இல்லற வாழ்வை நடத்தினார். தசரத ராமனோடு இவருக்கு ஐந்து மகன்களும் இரண்டு பெண் பிள்ளைகளையும் பெற்றெடுத்தார்.
பண்டிதரின் அறிவுத் தேடல்
ஒவ்வொருவரும் இந்து சதுர்வர்ண சதியை புரிந்து கொள்ளும்போது அதன் கொடூரம் வெளிப்படும். அந்த வகையில் அயோத்தி தாசர் தன் சமூகம் சாதிய வன்கொடுமையை அனுபவிப்பதற்கு காரணங்களை ஆராய்ந்து தெளிந்த போது இந்து சமயத்தையே உதறித் தள்ளுகின்றார்.
பண்டிதர் இளமையிலேயே கற்கும் ஆர்வத்தினை கொண்டு, குருகுலத்தில் சேர்ந்து கல்வி கற்றார். மானுடத்தில் ஒடுக்கப்பட்ட என்று சொல்லப்படுகின்ற பூர்வகுடி தலித் மக்கள் கல்வி கற்றால் காதில் ஈயம் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற மடையன் மனுவின் அதர்மத்தை தான் அனைத்தையும் கற்று பயின்றதின் மூலம் உடைத்தெரிகிறார் அயோத்தி தாசர். ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினைவினை பூர்வ குடிமக்கள் தருவோம் என்று அயோத்தி தாசர் படித்து கல்வி மாமேதை அம்பேத்கருக்கு முன்னால் எதிர்வினையாற்றினார்.
தமிழ், ஆங்கிலம், பாலி மொழிகளில் தேர்ச்சி பெற்றார். இஸ்லாம், கிருத்துவ இந்து சமய தத்துவங்களை ஆழ கற்று உணர்ந்தார். அனைத்து துறைகளிலும் கற்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிவுடைய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அரசர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிவருடியாக இருந்த ஆரியவர்க்கத்தின் ஆணிவேரை வெட்டி எரிய முடியும் என்றும் அறிந்தார் போலும்.
பண்டிதரின் பன்முகம்
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை அயோத்தி தாசரின் காலம் என குறிக்கலாம். தமிழ் அறிவு, சமூக அறிவு, மருத்துவ அறிவு, ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு புரட்சி, திராவிட எழுச்சி, தமிழ் உணர்வு, இன உணர்வு என்று அனைத்திலும் பண்டிதரே தமிழகத்திற்கு மட்டும் அல்லாது இந்தியாவிற்கே தத்துவ நோக்கில் வழிகாட்டி வழி நடத்தினார் என்றால் மிகையல்ல.
தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஆழமாக கற்றுணர்ந்து தமிழ் அறிஞராக இருந்தார். இவர் கற்ற பழந்தமிழ் நூல்கள் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கல்வியும் புலமையும் ஆதிக்க வல்லுறுக்களின் வன்கருத்தியலை சிதைத்தது. அனைத்து துறைகளிலும் கற்று வல்லவராக இருந்தார் என்பது மட்டுமல்ல களப்பணியாற்றி பூர்வகுடிமக்களின் உரிமையும் பெற்றுத் தந்தார்.
1870களில் தமிழகத்தில் பதிவுச் செய்யப்படாத பல ஆதித்திராவிட சங்கங்கள் இயங்கி வந்தன.
1870-ல் அத்வைதானந்த சபையை நீலகிரில் நிறுவினார். 1882 தியோசபிகல் சொசைட்டி அடையாற்றில் இயங்கி வந்தது. இந்த சொசைட்டியில் ஹென்றி ஆல்காட், அயோத்தி தாசர், பேரா பி.லட்சுமிநரசு என வேத எதிர்ப்பு போராளிகள் ஒன்றிணைய தியோசபிகல் சொசைட்டி வழிவகுத்தது.
1890 இல் திராவிட சங்கத்தை நிறுவினார். திராவிடர்களை அமைப்பாக்குகின்ற பணியை அயோத்திதாசர் இச்சங்கத்தின் மூலம் செய்தார்.
1891 இல் திசம்பர் 1 ஆம் தேதி திராவிட சங்கத்தின் முதல் மாநாடு நீலகிரியில் அயோத்திதாசர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, அதிகார பகிர்வு, சமூக இழிவு நீங்க போராடுவது என அத்தீர்மானங்கள் முன்மொழிந்தன. இந்த மாநாடே ஆதிக்க வர்கத்தின் அடிதளத்தை அசைத்தது.
1892 அன்றைய ஆளும் ஆங்கிலேயே அரசுக்கு அயோத்தி தாசர் இரண்டு கொள்கைகளை முன்வைத்தார்.
(i) பூர்வகுடி மக்களுக்கு 4 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.
(ii) பூர்வகுடி மக்களுக்கு புறம்போக்கு நிலம் இலவசமாக வழங்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையே பின்னாளில் தலித்துக்களுக்கு பஞ்சமி நிலம் ஆங்கில அரசு வழங்க தோன்றலாய் அமைந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஹென்றி ஆல்காட் (Colonal Hendry Olcott) அவர்களின் நட்புறவு அயோத்தி தாசர் களப்பணிகளுக்கும், அவர் மேற்கொண்ட உரிமைப் போர்களுக்கும் மேலும் வலு சேர்த்தது.
1894-ல் ஆல்காட் மற்றும் அன்னிபெசன்ட் அம்மையாரின் உதவியோடு சென்னையில் ஐந்து இடங்களில் பஞ்சமர் பள்ளிகளை நிறுவி சாதி இந்துக்களின் கல்வி கற்கும் பள்ளிகளில் தலித் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது கல்வி அருமை தெரிந்த அயோத்தி தாசர் தலித்துக்களின் கல்வி உரிமையை மீட்டெடுத்தார்.
பௌத்த மாற்றம்
இந்துமத தத்துவங்கள், தலித் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதை நன்குணர்ந்தார் அயோத்தி தாசர். தன் சமூக மக்கள் சமூக இழிவுகளுக்கு இந்து மதம் உட்படுத்துவதாலும் சதுர்வர்ண சாதி கட்டமைப்பை கட்டுடைக்கவும், சமூகத் தலித்தில் தலித் மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்காகவும் அக, புற, சுதந்திர உணர்வோட தம் மக்களின் வாழ்க்கையை நிலை நிறுத்த அயோத்தி தாசர் பௌத்தத்தை முன்மொழிந்தார்.
பௌத்த ஆர்வலர்களை நாடியே அவரின் சிந்தனை நகர்ந்தது. 1898 ஹென்றி ஆல்காட்டையும், அனகாரிகா தர்மபாலாவையும் சந்தித்து, தானும் தம் மக்களும் பௌத்த மதத்தை தழுவ இருப்பதாகத் தெரிவித்தார்.
அதனடிப்படையில் அயோத்தி தாசர், ஆல்காட் பஞ்சமர் பள்ளி ஆசிரியர் பி.கிருஷ்ணசாமி முதலியோர் 1898-இல் கொழும்புக்கு சென்று பௌத்த சமயத்தைத் தழுவி தலித் மக்களின் விடுதலைக்கும், தலித் மக்கள் பூர்வ பௌத்தர்கள் என்பதை நிலை நிறுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் 1898-இல் இதன் இந்திய சாக்கிய பௌத்த சங்கத்தை நிறுவினார். விகார்களையும் நிறுவி பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழகத்தில் கி.மு.300 முதல் கி.பி.600 வரை எழுச்சியோடு இருந்த பௌத்தத்தை இந்து மதம் தன்வயப்படுத்தியது. அந்தப் பண்பாட்டின் மீட்டெடுப்பை 1898-இல் அயோத்தி தாசர் மீட்டெடுத்து பௌத்தத்தை மீண்டும் தமிழகத்தில் வலுப்பெறச் செய்தார்.
தமிழகத்தில் திராவிட உணர்வையும் பகுத்தறிவு உணர்வையும் ஆழமாக உள்வாங்கி கொண்டு, பிராமணீய எதிர்ப்புக்கிடையில் பத்திரிக்கை நடத்தி காட்டினார்.
தமிழ்த் தேசியத் தந்தை
''தமிழ்த் தேசியத் தந்தை'' என்று அயோத்தி தாசர் அவர்களை முன்னிறுத்தலாம். 1907 இல் ஒரு பைசாத் தமிழன் என்ற செய்தி வார ஏட்டை தொடங்கினார். ராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 முதல் வெளிவந்து தமிழகத்தின் மூட வழக்காறுகளை, புராணங்களை, இந்துமத வெற்று கருத்துக்களை எதிர்த்து பிராமணியத்தின் வேரறுக்க தமிழன் வெளிவந்தது.
திராவிடன் ''தமிழன்'' என்கிற உணர்வை திராவிடர்களுக்கு உணர்த்தவும், தமிழனின் பண்பாட்டை காக்கவும், தமிழகத்தில் வீற்றிருந்த தலைவர்களுக்கு தத்துவார்த்த, பகுத்தறிவு வழிக்காட்டவும் அயோத்தி தாசர் வெற்றிகரமாக தமிழன் இதழை 19.06.1907 முதல் 1914 வரை நடத்தினார். பிறகு தமிழன் இதழை அடுத்த தலைமுறையினர் நடத்தினர்.
அயோத்திதாசர் இதழின் வாயிலாக
பூர்வ குடிமக்களே தமிழகத்தில் பகுத்தறிவையும், தமிழ் உணர்வையும், இன உணர்வையும், உணர்த்தினார்கள் என்ற வரலாறையும் மற்றும் சாதியத்தின் வேர் அறுக்க அஞ்சாத சிங்கங்களாக இருந்தார்கள் என்ற வரலாற்றை தமிழகத்து அறிவுலகம் மறைத்தது என்பது (அயோத்தி தாசர்) வரலாற்று இரட்டிப்பாகும்.
அயோத்திதாசரின் சில படைப்புகள்
அயோத்தி தாசர் 1912-இல் புத்தரின் வரலாற்றை ''புத்தரது ஆதிவேதம்'' என்ற நூலாக எழுதி பெரும் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டும் அல்லாது ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு அரிச்சந்திரன் பொய்கள், இந்திரர் வேத சரித்திரம், திருவள்ளுவர் வரலாறு யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் விபூதி ஆராய்ச்சி என்று முதலிய பல்வேறு ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார்.
தன் தலித் இனத்தின் வரலாற்றை தாங்கியும், இந்த இனத்தில் இழிவுகளை ஆய்ந்து தன் இழிவுகளை துடைக்க முற்படாத எவரும் வரலாற்றில் இடம்பெற மாட்டார்கள். தன் இனத்தின் மீது ஏவப்பட்ட சமூக கொடுமைகளை கண்டு தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு துயரங்களுக்கு இடையில் தன் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தந்து தன் சமூக விடுதலைக்கு பௌத்தத்தை முன்வைத்து, தன் வாழ்வை அர்பணித்து பணியாற்றிய அயோத்திதாசர் அவர்கள் 05.05.1914-இல் பரிநிர்வாணம் அடைந்தார்.
அவரின் கொள்கையைப் பரப்பவேண்டும். அவரது வரலாற்றை வன்கொடுமை செய்தவர்களின் அடுத்த தலைமுறை அவரது கொள்கைகளைப் படிக்க வேண்டும். தலித் பூர்வகுடிமக்களின் முழு வரலாறாகவும் தமிழகத்தில் அயோத்தி தாசர் விளங்குகிறார். திராவிட பண்பாட்டின் தாயாகவும், தமிழ்த் தேசியத்தின் தந்தையாகவும், அயோத்தி தாசர் விளங்குகிறார் என்பதை தமிழகம், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தலித் அறிஞர்களும், ஆய்வாளர்களும் அயோத்திதாசரின் கருத்தை மக்கள் மன்றங்களுக்கு எடுத்துச் செல்வதும், அவரின் சிந்தனைகள் எளிய பிரதிகளாக அடுத்த தலைமுறைக்கு அறிவுறுத்துவதும் உடனடித் தேவையாகும். ஒரு நூற்றாண்டுகளாக தாசரின் வரலாற்று, அவரின் நூற்றாண்டு இறுதியில் தான் பரப்புரையானது என்பது இந்த சமூகத்திற்கு மேலும் செய்த சிந்தனை வன்கொடுமையாகும். இனி மறைந்த வரலாறுகளை மீட்டெடுப்போம் அயோத்தி தாசரின் பௌத்த நெறியில் அணிவகுப்போம்.
18 நவம்பர் 2010
இரட்டை மலை சீனுவாசன்
செங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் காலை திறப்பு மணி அடிக்கும் வரை மறைவான இடத்தில் தங்கிப் படித்து மணி அடித்ததும் நேராக வகுப்பு சென்று அமர்ந்து கொள்வான்.
படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன் என்றார்.
1884 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்சினைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.
1886 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. முதல் மாநாட்டின் சாதித்த சாதனைகளையும், திட்டத்தை பற்றி தாதாபாய் நௌரோஜி We are met together as a political body to represent to our rulers our political aspirations but not to discuss social reforms என்று பேசினார்.
சீனிவாசன் 1980 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப்பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப் பறையன் என்று பெயர் வைத்தார்.
நான்! நான்! என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகலமும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல் நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமும் இல்லாமல் உண்மை பேசித் தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் இன்பமுள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் �பறையர்� இனத்தாருக்கு �பறையன் என்பவன் �நான் தான் என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான். எனவேதான் நான் பறையன் எனும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தேன் என்று எழுதினார். (- ஜீவிய சரித்திரச் சுருக்கம் - பக். 8).
1893 நவம்பர் 7ம் நாளிட்ட பறையன் இதழில் பறையன் முகவரியிட்டு வரும் கடிதங்களை முகவரியாளர்களைத் நேரில் தேட முடியாது என அஞ்சல் ஊழியர்கள் சேரிக்குள் நுழைவதில்லை என்றும் கூறினார். 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.
1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.
இந்துக்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள், பறையர், பஞ்சமர், தாழ்த்தப்பட்டோர் என்னும் பல பேரால் அழைக்கப்பட்டு வந்து இப்போது ஆதி திராவிடர்கள் என வழங்கும் சமூகத்தவர்களும் இதர சமூகத்தவர்கள் போல் அரசாங்கத்தில் அலுவல்களிலும், ஆட்சி முறைகளிலும், மாநில மந்திரி பதவியிலும் பங்கு பெற உரிமை உண்டாகி இருக்கிறது. ஆதி திராவிட இனம் என்னும் புதிய மதத்தை உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. அரசாணை 68-1893 ஒரு முக்கியமான ஆவணம். குறைந்தது 7 பிள்ளைகள் படிக்க நேர்ந்தால் அதை ஒரு பள்ளிக்கூடமாக ஏற்றுக்கொண்டு அப்பள்ளிக்கு மான்யம் அளிக்க அரசு முன்வரும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.
அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.
1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.
1893ஆம் ஆண்டு பறையன் பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம் 20, 30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.
1904-ல் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.
கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.
1924 செப்டம்பரில் 25-ம் தேதி நி. 2660 L & M கவர்ன்மென்ட் உத்தரவு
(1) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும் யாதொரு பட்டணம் அல்லது கிராமத்தில் உள்ள எந்த பொது ரஸ்தா தெரு, அல்லது கால் வழி மார்க்கமாகவாயினும் நடப்பதற்கு ஆட்சேபனை இல்லை.
(2) இந்தத் தேசத்திலுள்ள சாதி இந்துகள் எம் மாதிரியாகவும் எவ்வளவு மட்டிலும் யாதொரு சர்க்கார் ஆபீசைச் சேர்ந்த வளைவுக்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுஜனங்கள் வழக்கமாய்க் கூடும் இடங்கள் உபயோகிக்கலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டிடங்கள் ஆகிய இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும், அவ்வளவு மட்டிலும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லை என்பது அரசாங்கத்தின் கொள்கை என்பதை அவரவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். இதை இரட்டைமலை சீனிவாசன் முன்மொழிந்தார்.
1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார்பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.
செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனிவாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.
1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார். 1939ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி காலை 10 மணி அளவில் தந்தை பெரியார் காங்கிரஸ் அல்லாதார் இயக்கக் கூட்டங்களைக் கூட்டினார். இதற்கு முன்னர் 1933ஆம் ஆண்டு லார்டு லெவிங்க்டனால் Wonderful Rice ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த அரிசியில் 123 ஆங்கில எழுத்துகள் பதிக்கப்பட்டிருக்கும். அதைப் பெற்றவர்கள் தமிழகத்தில் இருவர். அவர்கள் 1. இரட்டைமலை சீனிவாசன் 2. திருப்பத்தூர் கௌதமாபேட்டை பெரியசாமி புலவர். இருவருமே தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்களின் முன்னோடிகள் ஆவர்.
�நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும் என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார். இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, 2-45 மணியளவில் எண்.4, எம். வீரபத்திரன் தெரு, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார்.
13 நவம்பர் 2010
என் வடிவமைப்பில் உருவானவை
1 / 39
2 / 39
3 / 39
4 / 39
5 / 39
6 / 39
7 / 39
8 / 39
9 / 39
10 / 39
11 / 39
12 / 39
13 / 39
14 / 39
15 / 39
16 / 39
17 / 39
18 / 39
19 / 39
20 / 39
21 / 39
22 / 39
23 / 39
24 / 39
25 / 39
26 / 39
27 / 39
28 / 39
29 / 39
30 / 39
31 / 39
32 / 39
33 / 39
34 / 39
35 / 39
36 / 39
37 / 39
38 / 39
39 / 39
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














